Sunday 18 June 2017

கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் நவீன்



ஜோர்ஜ்டவுன் -
பகடிவதை, சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் மரணத்தை தழுவிய தி.நவீனின் (வயது 18) உடல் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன்  தகனம் செய்யப்பட்டது.

தனது பள்ளி மாணவர்களால் கடந்த சனிக்கிழமை பகடிவதை செய்யப்பட்ட நவீன் நேற்று மாலை 5.31 மணியளவில் பினாங்கு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நவீனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற வேளையில் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, மஇகா தேசிய பொருளாளர் டத்தோஶ்ரீ சா.வேள்பாரி, மகளிர், குடும்ப சமூகநல அமைச்சர் டத்தோ ரோஹானி, பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில மஇகா தலைவர்கள், அரசு சார்பற்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த இளைஞனின் உயிரிழப்பு காரணமானவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும் என லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கு பெற்றோரும் பள்ளிகள், பொது இயக்கங்கள் ஆகியவை இணைந்து ஆகப்பூர்வமான திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என டத்தோஶ்ரீ வேள்பாரி தெரிவித்தார்.

பிற இடங்களிலிருந்து நவீனுக்கு அஞ்சலி செலுத்த பலர் அவரது இல்லத்திற்கு வந்திருந்தனர். அதோடு சமூக ஊடங்கங்களின் வாயிலாகவும் பலர் தங்களது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் நவீனின் உடல் பினாங்கு பத்து கத்தோங்கில் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment