Monday 19 August 2019

ஆலய கோபுரத்தை காட்டிலும் சமுதாய மேம்பாட்டில் கவனம் செலுத்துக- கணபதிராவ்

கோ.பத்மஜோதி

ஷா ஆலம்-
இன்றைய காலகட்டத்தில் ஆலயங்கள் தனிநபருக்காகவும் சுயகெளரவத்திற்காகவும் இருப்பதை காட்டிலும் அவை சமுதாயத்தின் பிம்பமாக திகழ்ந்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.
ஆலயங்கள் எப்போதும் சமுதாயத்தை பிரதிபலிப்பதாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஆலயங்கள் களம் காணும்போது அங்கே சமுதாயப் பற்று மேலோங்குகிறது.

அதை விடுத்து ஆலயங்களை சுயகெளரவத்திற்காகவும் தனிநபர் அடையாளத்திற்காகவும் நிர்மாணிப்பதில் எவ்வித பயனும் இல்லை. உயரமான கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுவதில் காட்டும் அக்கறையை நமது சமூகத்தின் மேம்பாட்டிலும் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு சமயத்தின் மேம்பாட்டிற்கான அடித்தளம் ஆகும் என்று சிலாங்கூர் மாநில ஆலய மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
ஆலயங்களை ஒருங்கிணைத்து செயலாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் போதெல்லாம் அது பலனளிக்காமலே போய்விடுகிறது. சிறு சிறு கோயில்களை ஒன்றிணைத்து பெரிய கோயிலாக நிர்மாணிக்க முனைந்தால் பல காரணங்களை காட்டி அதை தடுத்து விடுகின்றனர்.
சமய பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்ற வேறுபாடுகள் போதாதென்று தெய்வங்களின்  வேறுபாட்டையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்து செயல்படுவதை சாத்தியமற்றதாக உருவாக்கி விட்டனர்.

ஆலயங்கள் சமயத்தை கட்டிக் காக்கும் அதே வேளையில் சமூக மேம்பாட்டையும் ஒரு கொள்கையாக கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆலயங்கள் திகழ முடியும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் உட்பட ஆலய பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment