Saturday 3 August 2019

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை- மித்ராவின் செயல்பாடு என்ன?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தனியார் துறை பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்ற நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ‘வேதாளம் மீண்டும் மரம் ஏறுவதுபோல்’ சம்பளப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது ‘செடிக்’ அமைப்பின்கீழ் தனியார் துறை பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வந்த சம்பளம் ஆட்சி மாற்றத்திற்கு பெரும் கேள்விக்குறியாக உருவெடுத்தது.

கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் அப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. செடிக் அமைப்பு ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்ட நிலையில் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் என பல ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

ஆனால் கடந்த ஜூன் மாத  மத்தியிலே அவர்களுக்கான 5 மாதச் சம்பள பாக்கி தரப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில் அந்த மகிழ்ச்சி கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடித்தது.
தற்போது ஜூன், ஜூலை மாதத்திற்கான சம்பளம் இன்றுவரை 
தரப்படவில்லை என சில ஆசிரியர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். 

அதுமட்டுமல்லாது அந்த ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் மாதங்களாக இபிஎஃப், சொக்சோ சந்தா செலுத்தப்படவில்லை என்பதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலையிலுள்ள சொக்சோ சந்தாவை செலுத்தாத சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கையை என்ன சொல்வது? என்று பலர் புலம்புகின்றனர்.

மீண்டும் சம்பளப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள பாலர் பள்ளி ஆசிரியர்களின் விவகாரத்தில் மித்ராவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை அதிரடியாக அமையுமா? சர்ச்சைக்குள் சிக்குமா?

No comments:

Post a Comment