Saturday 18 July 2020

சிலிம் இடைத் தேர்தல்; மஇகா போட்டியிட வேண்டும்- டத்தோ முருகையா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம் சட்டமன்றத் தொகுதியில் அம்னோவுக்கு பதிலாக மஇகா வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி அங்கத்துவம் பெறுவதற்கு ஏதுவாக சிலிம் சட்டமன்றத் தொகுதி தற்காலிமாக இரவல் (Pinjam) அடிப்படையில் மஇகாவுக்கு வழங்கப்பட  வேண்டும்.

பேரா மாநிலத்தை தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு ஓர் நியமனப் பதவிகளை வழங்கக்கூட இன்றைய மந்திரி பெசார் தயக்கம் காட்டுகிறார்.

கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பிருந்த தொகுதிகளை அம்னோ எடுத்துக் கொண்டு தோல்வி அடையக்கூடிய தொகுதிகளான ஜெலாப்பாங், சுங்காய் போன்ற தொகுதிகளை வழங்கப்பட்டன. தோல்வி என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு தோல்வியை ஏற்றுக் கொண்டது மஇகா.

நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் எண்ணிக்கை சரிந்து விடக்கூடாது எனும் நோக்கி இடைத் தேர்தலை எதிர்கொண்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்தது மஇகா. அங்கு மஇகா வெற்றி பெற்றிருந்த போதிலும் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும்  பெருந்தன்மையுடன் அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது மஇகா.

அதேபோன்று பேரா மாநில அரசில் இந்தியர் பிரதிநிதி இடம்பெறும் வகையில் சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கருணை மனதோடு பங்காளி கட்சியான மஇகா மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அம்னோ பெருந்தன்மையுடன் இத்தொகுதியை தற்காலிகமாக மஇகாவுக்கு இரவல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ முருகையா குறிப்பிட்டார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ குசாய்ரி அப்துல் தாலிம் அண்மையில் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


No comments:

Post a Comment