Tuesday 30 October 2018

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் புதிய சாதனை பதித்தது ஆஸ்ட்ரோ


புத்ரா ஜெயா-
இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நினைவுபடுத்துவதில் கோலங்களின் பங்கு அளப்பரியதாகும். அவ்வகையில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,600 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினரின் கோலம் புதிய ஒரு சாதனையைப் பதித்து  மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 15 மீட்டர் நீளத்திலும் 9.5 மீட்டர் அகலத்திலுமான இக்கோலத்திற்கு இன்று “Biggest Portrait Art Made of Multi Colored Grains” எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புத்ரா ஜெயாவிலுள்ள ஐஓஐ சிட்டி பேரங்காடியில் நடைபெற்றது. இந்த சான்றிதழை மலேசிய சாதனையாளர் புத்தகத்தின் பிரதிநிதி வழங்க ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து பெற்று கொண்டார்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இக்கோலத்தை பொதுமக்கள் இன்று அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 2-ஆம் தேதி வரை ஐஓஐ சிட்டி பேரங்காடியில் கண்டு களிக்கலாம். மலேசியாவின் மிகப் பெரிய கோலம் என அங்கீகாரம் பெற்றுள்ள இக்கோலத்தை 20 பேர் கொண்ட ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினர்கள்,  தன்னார்வலர்கள்  10 மணி நேரத்துக்குள் உருவாக்கியுள்ளார்கள்.

டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “இந்த மிகப் பெரிய அழகான கோலத்தை உருவாக்கி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ள அனைத்து தன்னார்வலர்கள், ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினர்களுக்கு இவ்வேளையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இல்லையின்றால் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதற்குச் சாத்தியமில்லை”, என்றார்.

அதை வேளையில் இந்நிகழ்ச்சியின் போது, நம் நாட்டின் 7ஆவது பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது வரலாற்றை மையப்படுத்திய 1 மணி நேரம் ஆவணப்படம் விரைவில் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்படவுள்ளதாக செய்தி அறிவிக்கப்பட்டது. ‘மஹா சரித்திரம்’ எனும் தலைப்பில் ஒளியேறவுள்ள இந்நிகழ்ச்சியைத் தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment