Saturday 5 May 2018

புனித பிளோமினா தமிழ்ப்பள்ளி இணைக் கட்டடத்திற்கு வெ. 23 லட்சம் மானியம் வழங்கப்பட்டது



புனிதாசுகுமாறன்

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை நன்கு அறிந்து உதவி புரிய வேண்டும் என்ற உன்னத நோக்கில் தே.மு அரசாங்கம்  இங்குள்ள புனித பிளோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளிக்கு  23 லட்சம் வெள்ளி  நிதியை வழங்கியது.

தமிழ்ப்பள்ளிக்கும் மாணவர்களுக்கும் என்றும் உற்றத் துணையாக தேசிய முன்னணி அரசாங்கம் திகழும் என கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் பிரதிநிதியாக கலந்து கொண்ட  திருமதி தங்கராணி குறிப்பிட்டார்.

இந்த மானிய ஒதுக்கீட்டின் வழி  இணைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் நீண்ட கால ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என புந்தோங் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளருமான தங்கராணி சிறப்புரையாற்றுகையில் கூறினார்.

நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றால் பெற்றோர் தங்களது  பிள்ளைகளை  அருகில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டகூடாது.

தேர்வில்  மாணவர்களை முழு தேர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஒரு மாணவனை 8ஏ  பெற வைப்பது சாதாரண விஷயமல்ல. எவ்வித வேறுபாடும் பாராமல் ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் மாணவர்களை சிறப்பாக வழிநடத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தமது பாராட்டையும் வாழ்த்துகளையும் அவர்  தெரிவித்து கொண்டார்.

இன்று இப்பள்ளி யில் கல்வி அமைச்சின் நிதி அங்கீகாரத்திற்கான ஒப்புதல் கடிதத்தையும் 23 லட்சம் வெள்ளிக்கான மாதிரி காசோலையையும் பள்ளி வாரியத்திடம் தங்கராணி வழங்கினார்.

இந்த புதிய 4 மாடி கொண்ட இணைக்கட்டடத்தில் 12 வகுப்புகள் உள்ளன  எனவும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமாக இருப்பதால் பள்ளிக்கு இணைக் கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டு முன்வைக்க பட்டது என்றும் இணைக்கட்டடம் கட்டவேண்டும் என்பது பள்ளியின்  நீண்டநாள் கனவு என்றும் அதற்காக முழுமூச்சாக செயல்பட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்வதாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  ஜெயசீலன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளியின் வாரிய குழுத் தலைவர்  டாக்டர் சுப்பரமணியம்,  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சங்கரி, ஈப்போ பாராட் மஇகாவின் தொகுதி தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ராஜு , பேராக் மாநில சபாநாயகர் எஸ். தங்கேஸ்வரி , ஜசெக எம்.குலசேகரன்  உட்பட பொதுமக்களும் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment