Friday 5 October 2018

பரிதவிக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுங்கள்- எம்.பி.ராஜா கோரிக்கை


கோலாலம்பூர்,-
பூச்சோங் புத்ரா பெர்டானாவிலுள்ள தூர்ந்து போன ஈயக் குட்டையில் தவறி விழுந்த ஒரு சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் பணிக் குழுவைச் சேர்ந்த ஆறு வீரர்கள், துரதிஷ்டவசமாக அக்குட்டையில் ஏற்பட்ட உள்நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மலேசியர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் மூழ்கச் செய்துள்ளது.

கடமையில் ஈடுபட்டிருந்த போதே வீர மரணம் எய்திய ஆறு வீரர்களின் ஆத்மாக்களும் இறைவனிடத்தில் இளைப்பாற, மலேசியர்களோடு இணைந்து தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள மஇகா செலாயாங் தொகுதி தலைவர் எம்.பி.ராஜா, அவ்வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்து கொண்டார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இத்துயரச் சம்பவத்தினால் ஒட்டு மொத்த மீட்புப் பணிக் குழு வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வேளையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வீர மரணம் எய்திய அறுவரின் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசாங்கம் சிறப்பு உதவி நிதியும் இதர அனுகூலங்களையும் வழங்க வேண்டும் என மஇகா சிலாங்கூர் மாநில தகவல் பிரிவுத் தலைவருமான எம்.பி.ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட வீரர்களின் நல்லுடல்களுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிப் படையினரின் இறுதி மரியாதையோடு தத்தம் ஊர்களிலுள்ள இஸ்லாமிய மையத்துக் கொள்ளையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment