Friday 2 February 2018

மாணவி வசந்தபிரியா மரணம் 'கொலை'யாக கருதப்பட வேண்டும்- டேவிட் மார்ஷல்


செபெராங் பிறை-
மாணவி வசந்தபிரியாவின் மரணம் தற்கொலை அல்ல; மாறாக அதை ஒரு கொலைச் சம்பவமாக கருத வேண்டும் மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன் வலியுறுத்தினார்.

ஆசிரியர் ஒருவரின்  கைதொலைபேசி களவு போனது தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியா மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அந்த மன உளைச்சலின் விபரீத முடிவே அவரின் தற்கொலை முயற்சி என்ற நிலையில் இவ்விவகாரத்தை கொலை சம்பவமாக கருத வேண்டும் எனவும் போலீசார் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் செபெராங் ஜெயா மருத்துவமனை சவக்கிடங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டேவிட் மார்ஷல் கூறினார்.

கைதொலைபேசி களவு போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியை நடந்து கொண்ட விதமும் ஒரு பகடிவதைதான். கடந்தாண்டு பகடிவதைக்கு ஆளாகி மரணமடைந்த நவீன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவில் வசந்தபிரியாவின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மீது போலீசார் இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இதனிடையே,  மாணவி வசந்தபிரியாவை பெற்றோரின் அனுமதி இன்றி ஆசிரியையும் அவரது கணவரும் காரில் அழைத்துச் சென்றது ஏன்? வீட்டில் விடுவதற்காக அம்மாணவியை அழைத்துச் சென்றபோது அங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை.

சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிட மாற்றம் செய்தது மட்டும் சரியான  தீர்வாகாது. அந்த ஆசிரியை மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேவிட் மார்ஷல் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment