Tuesday 14 May 2019

முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்க முயன்ற 4 பயங்கரவாதிகள் கைது- ஐஜிபி

கோலாலம்பூர்-

சீபில்ட் ஆலய கலவரத்தின்போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்  முகமட் காசிம் மரணத்திற்கு பழி தீர்க்கும் வகையில் முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு ஆடவர்களை புக்கிட் அமான் தீவிரவாத துடைத்தொழிப்பு சிறப்பு படையினர் கைது செய்தனர்.
மே 5 முதல் 7ஆம் தேதி வரை திரெங்கானு, கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் உள்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர், ரோஜிங்யாவைச் சேர்ந்த இருவர், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் இவ்வாடவர்கள் தாக்குதல் நடத்தி பல தனிநபர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது இந்த கைது நடவடிக்கையின் வழி தடுக்கப்பட்டுள்ளது.

முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்கும் வகையில் ரமடான் மாதத்தின் முதல் வாரத்தில் தாக்குதல் நடத்த இந்த குழு தயாராகி வந்தது என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment