Thursday 16 May 2019

தேடப்படும் 3 பயங்கரவாதிகள் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர்- ஐஜிபி

கோலாலம்பூர்

சீபில்ட் ஆலய கலவரத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக வெடிதாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு நபர்களுடன் தொடர்புடைய மேலும் 3 நபர்கள் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர் என்று சந்தேகிப்பதாக அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் வழிபாட்டுத் தலங்களிலும் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக காரணம் காட்டி முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்ய திட்டமிட்ட இந்நால்வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மே 5 முதல் 7ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வாயிலாக இந்நால்வரும் கைது செய்யப்பட்டனர். ஆயினும் இந்நால்வருடன் தொடர்புடைய மூவர் இன்னமும் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பீடோங், கெடாவைச் சேர்ந்த ஷாஸானி மஹ்சான், முகமட் நூருல் அமின் அஸிஸான், இறுதியாக பந்திங்கில் வசித்து வந்த பாதிர் திர் எனும் இந்தோனேசியப் பிரஜை  ஆகியோரே தேடப்படும் நபர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்து வெடிகுண்டு கருவிகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது சிரியாவில் இருக்கும் மலேசிய தீவிரவாதி ஒருவன் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த குழுவினரை இயக்கி வந்துள்ளான் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment