Saturday 23 May 2020

ஓர் உயிரை பறிப்பதுதான் உங்களின் இலக்கா? டத்தோஶ்ரீ தனேந்திரன் காட்டம்

ரா.தங்கமணி 

பட்டர்வொர்த்-

தன்னுடன் பணிபுரியும் சக பணியாளருடன் ‘டிக் டாக்’ காணொளி செய்தற்காக 20 வயது இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகடிவதையின் பலனாக இன்று சமூக ஊடகப் போராளிகள் தங்களது இலக்கில் வெற்றி கண்டுள்ளனரா? என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
போலி முகநூல் பக்கத்தில் திவ்யநாயகி எனும் பெண்ணின் டிக் டாக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொரட்ந்து அங்கு பதிவு செய்யப்பட்ட காரசாரமான  கருத்துகளால் மனவேதனை அடைந்த அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனும் செய்தி மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்திய சமுதாயத்தின் தவறான வழிகாட்டல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியின் உண்மைதன்மையை அறியாமல் பகிரப்பட்ட கருத்துகள் அந்த பெண்ணை மனமுடையச் செய்துள்ளதே அவரின் இந்த முடிவுக்கு காரணமாகும்.

ஒரு பெண் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைதான் சமூக ஊடகப் போராளிகள் விரும்புகின்றனரா? அவ்வாறாயினும் அந்த பெண் இழைத்துள்ள குற்றம் தான் என்ன?

தன்னுடன் பணிபுரியும் அந்நிய நாட்டவருடன் டிக் டாக் காணொளி செய்தது அப்பெண்ணின் தனிபட்ட உரிமை. அதனை கேள்வி எழுப்பும் அதிகாரம் அப்பெண்ணின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது.
இத்தகைய சூழலில் அப்பெண்ணின் நடத்தை குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டு அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது சமூக ஊடக பயன்பாட்டின் கீழ் குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

அதோடு போலி முகநூல்  பக்கத்தின் வழி அப்பெண்னை களங்கப்படுத்திய சம்பந்தப்பட்ட ஆடவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய டத்தோஶ்ரீ தனேந்திரன், மனவலிமை இல்லாதோரை பகடிவதை செய்வது அவர்களை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டுச் செல்லலாம் என்பதை சமூக ஊடகப் போராளிகள் இனியாவது புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment