Thursday 4 June 2020

மித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே!- கணபதிராவ் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான  மித்ராவின் வழி மிகப் பெரிய துரோகம் இந்நாட்டு இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.

11ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த 2016 முதல் 2020 வரை
அனைவரும் நன்கு அறிந்த மித்ராவின் (இதற்கு முன் 'செடிக்' என்று அழைக்கப்பட்டது) வழி வெ.500 மில்லியன் (50 கோடி வெள்ளி) ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

இவ்வமைப்பின் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் (10 கோடி வெள்ளி) இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் பாதியளவு கூட இந்திய சமுதாயத்தைச் சென்றடையாதது உண்மையிலேயே இச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.

நம்பதகுந்த தரப்பிலிருந்து மித்ரா (செடிக்) அமைப்புக்கு எவ்வளவு பணம்  கிடைத்தது, அதில் எவ்வளவு செலவிடப்பட்டது, திருப்பி அனுப்பப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

2016:  வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.60 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.35 மில்லியன்
திருப்பி அனுப்பபட்டது: வெ. 25 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.65 மில்லியன்

2017: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது:  வெ.67 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.58 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 9 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.42 மில்லியன்.

2018: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ. 100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 1 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 99 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ. 99 மில்லியன்

2019: வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
 கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 56 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 44 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: 44 மில்லியன்

2020: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: தகவல் இல்லை
திருப்பி அனுப்பப்பட்டது : தகவல் இல்லை
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: தகவல் இல்லை.

இந்த தரவுகளின் வழி செடிக் நிர்வாகத்தின் போது 2016-2017ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்காற ஒதுக்கப்ட்ட நிதியில் 60% தொகை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் முழுமையான தொகை ஏன் வழங்கப்படவில்லை?

தேசிய முன்னணி அரசாங்க நிர்வாகத்தின் போது அறிவித்த தொகையில் அரையளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தை ஏமாற்றியதாக பொருள்படாதா? கொடுக்கப்படாத மீதப் பணம் எங்கே போனது?

வழங்கப்பட்ட பாதியளவு தொகையை கூட முழுமையாக செலவிட முடியவில்லை என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

இப்படி முழுமையாக செலவிடப்படாததற்கு காரணம் இந்த நிதி தேவைப்படவில்லையா? அல்லது இந்த பணம் செலவிடப்பட முடியாத வகையில் இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டு விட்டதா?

அதேபோன்று தான் 2018ஆம் ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை.14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 'செடிக்' உருமாற்றம் கண்டு 'மித்ரா'வாக மாறிய நிலையில் முழுமையான ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றும் அதனை முழுமையாக செலவிடவில்லை. 2019இலும் முழுமையான தொகையை செலவிடவில்லை.

99% நிதியை முழுமையாக செலவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் மித்ராவும் சொல்லி கொண்டே இருக்கின்றனர். 2019இல் தாமதமாக நிதி கிடைத்ததால் பயன்படுத்தாத நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டது என காரணம் கூறும் நிலையில், அவ்வாண்டில் உண்மையிலேயே நிதி தாமதமாகத்தான் கிடைத்ததா என்ற பெரும் கேள்விக்கு பதில் கூற முடியுமா?

11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் செடிக், மித்ரா ஆகியவற்றின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கான 50% ஒதுக்கீடு வீண்டிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இப்படி வெறுமனே வீண்டிக்கப்பட்டுள்ள இந்த நிதியை ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த் இந்திய சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழி இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த நிதி அறிவிக்கப்பட்டது முதல் இந்நாள் வரையிலும் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான எவ்வித முறையான திட்டமிடலும் மித்ராவிடமோ, ஒற்றுமை துறை அமைச்சிடமோ அல்லது இந்திய மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை என்பதுதான் உண்மை.

சிலாங்கூர் மாநிலத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவுக்கு ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் என்னை பொறுத்தவரை இது மிகப் பெரிய இழப்பு ஆகும். 11 ஆவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 248 மில்லியன் வெள்ளி செலவிடப்படாத நிலையில்  2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 மலேசிய திட்டம் அறிவிக்கப்படும் சூழலில்ப பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்பட்ட தொகை இந்திய சமுதாயத்தை மீண்டும் வந்து சேராது.

இந்திய சமுதாயத்திற்கான இழப்புகள் நிறைவு பெறாதா? தேமு, பிஎன் இந்திய சமூகத்திற்கான துரோகச் செயல்கள் இன்னும் தொடர்கதையாகுமா?

இந்த 248 மில்லியன் ஒதுக்கீட்டை இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியிருந்தாலே போதும், கோவிட்-19 காலத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்திருக்கலாம் என்று கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.


No comments:

Post a Comment