Thursday 24 October 2019

சிறையில் கணவர்; தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது- சாமிநாதனின் மனைவி வேதனை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என குற்றஞ்சாட்டி தமது கணவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் துணைவியார் திருமதி வீ.உமாதேவி கூறினார்.
இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக மலாக்கா மாநிலத்தில் ஏற்பாடு செய்ய தமது கணவர் திட்டமிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைத்துள்ளனர்.

தீபாவளி ஏற்பாட்டை உடனிருப்பவர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அம்மாநிலத்திற்கே தலைவராக திகழ்ந்தவர் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் அதிருப்தி நிலையிலே உள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என குற்றச்சாட்டப்பட்டுள்ள தமது கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் மோசமான நிலையில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்த அவரின் உடல்நலம் குறித்து தாம் கவலை கொள்வதாக கூறிய உமாதேவி, தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்; தவறு புரிந்திருந்தால் உரிய தண்டனை கொடுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால், ஆதாரம் இருப்பதாக சொல்லி தங்களது தற்காப்பு வாதத்தை கூட புரிய முடியாமல் அவரையும், பிறரையும் அடைத்து சிறையில் வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையானது என்று புக்கிட் அமான் முன்புறம் பதாகை ஏந்திய திருமதி உமாதேவி கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தும் ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. இந்த ஒன்றுகூடலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ,பொது இயக்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானோர் வந்திருந்தனர்.

No comments:

Post a Comment