Saturday 19 October 2019

தெக்குன் கடனுதவித் திட்டத்தில் எஞ்சியிருக்கும் வெ.12 மில்லியன் – கணபதிராவ் ஆதங்கம்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்தில் உள்ள தொழில்முனைவர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தெக்குன் கடனுதவி திட்டத்தில் 12 மில்லியன் வெள்ளி எஞ்சியிருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 மில்லியன் வெள்ளியில் 8 மில்லியன் வெள்ளி மட்டுமே தெக்குன் கடனுதவித் திட்டத்திலிருந்து இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களிடமிருந்து முறையான விண்ணப்பங்கள் வராரதே இந்த நிதி அதிகமாக செலவிடப்படாதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டும் முறையாக செலவிடப்படாதது ஏமாற்றமே ஆகும். 
மித்ராவுக்கு ஒதுக்கிடு செய்யப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது என்ற தகவல்  இன்னும் தம்மிடம் கிடைக்கப்படவில்லை. இந்தியர்களுக்கு செலவிடப்படாத இந்நிதி  மீண்டும் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.

இவ்வாண்டு பட்ஜெட் அறிவிப்பிலும் இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தெக்குன் கடனுதவி, மித்ரா ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடுகள் இந்திய சமுதாயத்தை முழுமையாக சென்றடைவதற்கு ஏதுவாக பல்வேறு பொருளாதார நிபுணர்களை ஒன்றிணைத்து  2020 பட்ஜெட் விளக்கமளிப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாளை 19ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்திய சமுதாய பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 2020 பட்ஜெட் தொடர்பான அனுகூலங்களையும் சந்தேகத்திற்கான தெளிவையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment