Tuesday 25 June 2019

ஏற்றுமதி மட்டுமல்ல; மக்களின் பயன்பாடும் அவசியம்; ‘செம்பனையை நேசிப்போம்’ பிரச்சாரம் தொடங்கியது

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
நாட்டின் உற்பத்தி பொருளான செம்பனை எண்ணெயை மலேசியர்கள் உபயோகிப்பதன் மூலம் நாட்டின்  பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லக்கூடும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது செம்பனை எண்ணெய் துறையாகும். ஆனால் செம்பனை எண்ணெயை மலேசியர்கள் அதிகளவு பயன்படுத்துவதை பிற நாடுகளுக்கு அது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் செம்பனை எண்ணெயின் பயன்பாடு உள்ளது. ஷாம்பு, சவர்க்காரம், உணவு பொருள், அழகு சாதனம் என பலவற்றில் செம்பனை எண்ணெய் பயன்பாடு உள்ளது. நாம் தாம் அதனை அறிந்து வைத்திருக்காமல் இருக்கிறோம் என்று ‘செம்பனையை நேசிப்போம்’ நிகழ்வில் உரையாற்றியபோது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான  கணபதிராவ் குறிப்பிட்டார்.

செம்பனை எண்ணெயை மலேசியர்கள் அதிகளவு பயன்படுத்தத் தொடங்கினால் அது செம்பனை துறை மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருக்கும் என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மை தொழில்துறை அமைச்சர் திரேசா கோக், செம்பனை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.

அமைச்சராவதற்கு முன்னர் செம்பனை எண்ணெயின் பயன்பாட்டை முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போதுதான் அதன் பயன்பாடு எந்தளவு நமக்கும் நாட்டுக்கும் அவசியமாகிறது என்பது புரிகிறது.

இன்று செம்பனை எண்ணெய் பிற நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியின் தேவை குறைந்து போனால் அது நாட்டின் பொருளாதாராத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏற்றுமதியையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்காமல் மக்கள் அனைவரும் செம்பனை எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக ஆதரித்தால் அதுவே மிகப் பெரிய பலமாக மாறிவிடும் என கூறிய அவர், அதனாலேயே தற்போது ‘செம்பனையை நேசிப்போம்’ பிரச்சாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக சொன்னார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற செம்பனையை நேசிப்போம்’ பிரச்சார நிகழ்வு சமையல் போட்டியுடன் நடைபெற்றது.  அதோடு செம்பனை எண்ணெய் பற்றிய விளக்கமளிப்பு, புதிர்போட்டி, சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினர் யோகராஜா, இந்திய கிராமத் தலைவர்கள் கோபி, பத்மநாதன், சந்திரசேகர் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment