Tuesday 15 January 2019

மைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்ஓஎஸ் எனப்படும் தேசிய சங்கங்களின் பதிவிலாகா இன்று ரத்து செய்துள்ளது.

கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள கடிதத்தின் நகல் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதன் தலைமை இயக்குனர் மஸ்யாத்தி அபாங் இப்ராஹிம் தெரிவித்தார்.

டான்ஶ்ரீ எம்.கேவியஸ், டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் என இரு பிரிவாக பிளவுபட்ட தரப்பினர் தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அது சாத்தியமாகாததால் கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் ஆர்ஓஎஸ்-இன் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மைபிபிபி கட்சியில் தலைமைத்துவப் போராட்டம் வெடித்தது.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடிதம் வழங்கினார். பின்னர் அதனை மீட்டுக் கொண்டார்.

அதே வேளையில் டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து விலக்கி விட்டதாக டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்ததோடு தற்போது பிரதமர் துன் மகாதீருக்கும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

ஆயினும் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் நீடிப்பதாக டத்தோஶ்ரீ மெக்லின் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment