Sunday 30 July 2017

கெட்கோ பாட்டாளிகளுக்கு அநீதி இழைக்கும் பெரு நிறுவனத்தை புறக்கணியுங்கள் - பிஎஸ்எம் அருட்செல்ல்வன்



ஈப்போ-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கெட்கோ தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அத்தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என பிஎஸ்எம் கட்சியின்  பொதுச் செயலாளர் அருட்செல்வன் வலியுறுத்தினார்.

அதிகார பலமும், பண பலமும் ஒன்றிணைந்து தோட்டப் பாட்டாளிகளின் போராட்டத்தை திசை திருப்புவதோடு அவர்களுக்கு எதிரான அடக்குமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்களது நில மீட்பு உரிமை போராட்டத்தை முன்னெடுத்துள்ள இந்த தோட்டப் பாட்டாளிகள் எதிர்கொண்டு வரும் போராட்டத்திற்கு மலேசிய இந்தியர்கள் ஒன்றிணைந்து ஆதரவை தரும் வகையில் சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையை அனைவரும் கையில் எடுக்க வேண்டும்.

குறிப்பாக அவர்களின் வணிக, வர்த்தக மையங்களை புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியர்களும் முன்னெடுத்தால் இவ்விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என இங்கு நடைபெற்ற விளக்கவுரை கூட்டத்தில் கலந்து கொண்ட அருட்செல்வம் கூறினார்.

சம்பந்தப்பட்ட தோட்டத்திற்குச் சென்று போராடுவது மட்டும் போராட்டமாகாது. சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்தை நிராகரிக்கும் வகையிலான போராட்டத்தை முன்னெடுத்தாலே நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

தங்களின் நில மீட்பு உரிமை போராட்டத்திற்கு போராடி வரும் தோட்டப் பாட்டாளிகள் கைது செய்து, சிறையில் அடைத்து பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் வேளையில் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களும் இவர்களின் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டும் என அருட்செல்வன் குறிப்பிட்டார்.


இந்த விளக்கக் கூட்ட நிகழ்வில் கெட்கோ தோட்டப் பாட்டாளிகளான ஜோன் கென்ஸ்டியன், மணிமேகலை உட்பட இங்குள்ள பல்லேறு அரசியல் கட்சியினர், பொது இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment