Sunday, 5 August 2018

பேரா மஇகா மகளிர் பிரிவு; 3 தொகுதிகளில் போட்டி

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மஇகா மகளிர் பிரிவில்  3 தொகுதிகளுக்கு போட்டி நிலவுகின்ற சூழலில் 19 தொகுதிகளில் போட்டியில்லாமல் தலைவி, துணைத் தலைவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்றுக் காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது பாகான் செராய், பத்துகாஜா, சுங்கை சிப்புட் ஆகிய மூன்று தொகுதிகளில் தலைவி, துணைத் தலைவிக்கான போட்டிக்கு இரு தரப்பினர் வேட்புமனு செய்தனர்.

பினாங்கு மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி பிரேமா தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட நிலையில் பேரா மாநில மஇகா மகளிர் தலைவி திருமதி தங்கராணி, பேரா சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

பேரா மஇகா இளைஞர் பிரிவு; 22 தொகுதிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மஇகா இளைஞர் பிரிவுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுக் காலை நடைபெற்ற நிலையில் 22 தொகுதிகளுக்கு எவ்வித போட்டியும் இல்லாமல் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சோங் மாலிம், தைப்பிங் ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டதால் பிற  தொகுதிகள் எவ்வித போட்டியும் எதிர்நோக்கவில்லை.

தேசிய மஇகா இளைஞர்  துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு, செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் ஆகியோர் இந்த வேட்புமனுத் தாக்கலை வழி நடத்தினர். பேரா  மஇகா துணைத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பாளராக கலந்து கொண்டனர்.

பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவின் நடப்புத் தலைவர் நேருஜி முனியாண்டி சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியை தற்காக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வெ.1,500 குறைந்தபட்ச சம்பளம்; அடுத்த அமைச்சரவையில் விவாதிக்கப்படலாம்; குலசேகரன்

ஈப்போ-
குறைந்தபட்ச  சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவிலும் சபா, சரவாக்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம சீரான சம்பள முறையை அமலாக்கம் செய்வது தொடர்பில் தற்போது எவ்வித முடிவும் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

'விரைவில் நல்ல செய்தி வரலாம்' என கம்போங் தாவாஸ் பகுதியில் 20 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

தற்போது தீபகற்ப மலேசியாவில் 1,000 வெள்ளியாகவும் சபா, சரவாக்கில் வெ.800 முதல் 920 வெள்ளியாகவும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அடிப்படைச் சம்பளமாக வெ. 1,500  உயர்த்துவது ஐந்தாண்டு கால திட்டமாகவும் முதலாளிமார்களுக்கு சுமை ஏதும் இல்லாத வகையில் அமல்படுத்துவது அவசியமாகும்.

ஒரே நேரத்தில் வெ.1,500ஐ உயர்த்த முடியாது. அவ்வாறு செய்தால் தனியார் துறை நிறுவனங்கள் வருமானம் குறைந்தால் அதன் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் போகலாம் என்றார் அவர்.

ஐந்தாண்டு காலத்திற்குள் அடிப்படைச் சம்பளமாக 1,500 வெள்ளியை உயர்த்துவது பக்காத்தான் ஹராப்பானின்  தேர்தல் கொள்கை அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

Saturday, 4 August 2018

ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டும் நாடு திவாலாகவில்லை- நிதியமைச்சர்

புத்ராஜெயா-
ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரியை அரசாங்கம் அகற்றியுள்ளபோதிலும் அரசாங்கம் திவாலாகவில்லை என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஜிஎஸ்டி வரியை அகற்றினால் நாடு திவாலாகி  விடும் என முந்தைய அரசாங்கம் கூறி கொண்டிருந்தது. ஆனால் அந்த வரியை அகற்றிய போதிலும் நாடு சீரான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது எனவும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு இறுதி வரைக்குமான எரிவாயு மானியம் வெ.3 பில்லியன்  தயார்படுத்தப்பட்டுள்ளது எனவும்  ரோன் 95 லிட்டருக்கு 2.2.0 வெள்ளியாகவும் டீசல் 2.18 வெள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் விலை 74 அமெரிக்க டாலராக உயர்வு கண்டுள்ள நிலையில் இதற்கு முன்  52 அமெரிக்க டாலராக இருந்தது.

ஆக. 15 முதல் உதவிநிதி வழங்கப்படும்- நிதியமைச்சர்


புத்ராஜெயா-
மூன்றாம் கட்ட உதவி நிதி தொகையை ஆகஸ்ட் 15 முதல் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதியான உதவிநிதி தொகை தொடரும் நிலையில் 4.1 மில்லியன் பேருக்கு வெ.1.6 பில்லியன் வரையிலான உதவிநிதி வழங்கப்படவுள்ளது.

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த உதவிநிதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

நச்சுணவினால் பாதிப்பு; சம்பந்தப்பட்ட குத்தகையாளரின் ஒப்பந்தத்தை ரத்து செய்க- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
தைப்பிங்கிலுள்ள மாரா அறிவியல் தொடக்கநிலை கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) பயிலும் மாணவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளருக்கான குத்தகையை மாரா கழகம் ரத்து செய்ய வேண்டும் என மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த 1ஆம் தேதி நிகழ்ந்த நச்சுணவினால் 103 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளான அவர்கள் தைப்பிங் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர்.

கடந்த ஜூலை 12ஆம் தேதியே 40 மாணவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு சம்பவங்களுக்கும் ஒருவரே உணவு விநியோப்பாளராக இருந்துள்ளார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளரின் குத்தகையை இன்னும் 7 நாட்களுக்குள் மாரா கழகம் ரத்து செய்ய வேண்டும் என கூறிய அவர், குத்தகை முடிவடைய இன்னு 6  மாத காலம் உள்ளது என்ற காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வைக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்ப சிறந்த சேவையை வழங்க தவறும் தரப்பினரின் குத்தகையை ரத்து செய்து விடலாம் என்று கூறிய அவர்,  மாரா சட்டப் பிரிவு தொடர்பு கொண்டு உணவு விநியோகிப்பாளரின் குத்தகையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக சிவநேசன் கூறினார்.

ஆயினும் மாநில சுகாதார இலாகா சம்பந்தப்பட்ட குத்தகையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் சொன்னார்.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் உணவுக் கிடங்கு 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மாநில சுகாதார இலாகாவின் கண்காணிப்பில் செமாங்கோலில் இருந்து உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

7ஆம் தேதி முதல் பேரா சட்டமன்றக் கூட்டம்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநிலத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது என மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.

7ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

இந்த கூட்டத் தொடரின்போது நேர விவாதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவருக்கான விவாத நேரம் 40 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாக விவாத நேர 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாகவும் கேள்வி- பதில் நேரம் 1 மணியிலிருந்து 1  1/2 மணிநேரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்முறை எதிர்க்கட்சித் தலைவருக்கான தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு தனி அலுவலகம், அதிகாரப்பூர்வ வாகனம், 2 அதிகாரிகள், கார் ஓட்டுனர், மாதந்தோறும் கூடுதல் மானியம் ஆகியவை வழங்கப்படும் என்றார்.

பேரா சட்டமன்றக் கூட்டம்; பாதுகாப்புப் பணிகளை பாதுகாப்பு அதிகாரிகளே மேற்கொள்வர்- சபாநாயகர்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில அரசியல் வரலாற்றில் கறுப்பு புள்ளியாக கருதப்படும் 2009 சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பாதுகாப்புப் பணிகளை பாதுகாப்பு அதிகாரிகளே மேற்கொள்வர் எனவும் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு  மாநில ஆட்சியை கைப்பற்றிய அப்போதைய மக்கள் கூட்டணி அரசு 2009 பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டபோது போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கையால் சட்டமன்ற சபாநாயகர் வலுகட்டாயமாக அவரது இருக்கையிலிருந்து அகற்றப்பட்டார்.

இச்சம்பவம் மாநில அரசியல் வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாக கருதப்பட்ட வேளையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க வரும் 7ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் எனவும் போலீசார் படையினர் கிடையாது எனவும் அவர் சொன்னார்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

சொஸ்மாவை அகற்றுவதை விட போலீசாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தலாம்

ஷா ஆலம்-
சொஸ்மா சட்டத்தை அகற்றுவதை விட போலீஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தலாம் என சட்ட வல்லுனர் அட்னான் செமான் தெரிவித்தார்.

குற்றவியல் பாதுகாப்பு சட்டம் 2012 ( சிறப்பு நடவடிக்கை)  எனப்படும் சொஸ்மா சட்டத்தின் கீழ் அதிகார அத்துமீறம் இல்லாதிருப்பதை உறுதி செய்ய இது அவசியமாகும்.

சொஸ்மா சட்டம் போலீசாருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதால் அதனை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

'என்னுடைய கருத்தின்படி சொஸ்மா சட்டம் அகற்றப்படுவதை விட போலீஸ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் அதிகாரத்தை கட்டுப்படுத்துவற்கான மாற்றுவழியை கண்டறிய வேண்டும்.'

குற்றவியல் சம்பவங்களை துடைத்தொழிப்பதற்கு சொஸ்மா சட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவர், இச்சட்டத்தின் வழி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்வர்.

கூட்டரசு அரசியலமைப்பின் 149ஆவது பிரிவை அடிப்படையாகக் கொண்டு சொஸ்மா மீது கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் நோக்கங்களுக்காக சொஸ்மா சட்டம் தவறாக பயன்படுத்துவதை தொட்டு பேசிய அவர், பிரதமர் துன் மகாதீர் வெளிபடுத்திய கருத்தில் உண்மை உள்ளது.

'சொஸ்மா சட்டத்தின் வழி அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை மறுக்க முடியாது, மனிதர்களின் முடிவுக்கேற்ப பிற சட்டங்களும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தையும் தலைவர்களையும் விமர்சித்த பக்காத்தான் ஹராப்பான் ஆர்வலர்களான மரியா சின் அப்துல்லா, டத்தோ கைருடின் அபு ஹசான், மத்தியாஸ் சாங் போன்றவர்களை தேசிய முன்னணி அரசாங்கம் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பற்காக சொஸ்மா தவறாக கையாளப்பட்டுள்ளது.

இதன்வழி பொது நலனுக்கும் தேச பாதுகாப்புக்கும் பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பதற்கும் உருவாக்கப்பட்ட சொஸ்மா சட்டம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயங்கரவாத நடவடிக்கையில் தொடர்புடைய 1,000 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இத்தகையதொரு நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பதற்கும் பெரிதும் உதவியுள்ளன என சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொன்னார்.

கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 3 இந்தியர்கள் பதவியேற்பு


ரா.தங்கமணி

கோலகங்சார்-
கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக மூன்று இந்தியர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஜசெக சார்பில் ஹெலன், பிகேஆர் கட்சியின் சார்பில் காசிநாதன், பொது இயக்கத்தின் சார்பில் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நேற்று நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் இம்மூவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

Thursday, 2 August 2018

அதிரடிச் சோதனை; 10 பேர் கைது; போதைப்பொருட்கள் பறிமுதல்


ஈப்போ-
கடந்த இரு நாட்களில் பேரா மாநில போதைப்பொருள் குற்றவியல் விசாரணை பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 36 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஈப்போவிலுள்ள மெங்களம்பு, கம்போங் தாவாஸ் பகுதியிலும் தைப்பிங், பொக்கோக் அசாம் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதன் ஏசிபி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி காலை 11.30 மணியளவில் போதைப்பொருள் குற்றவியல் விசாரணை பிரிவினர் தாமான் கிளேடாங் பெர்மாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த 39 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞரை பரிசோதனை செய்ததில் 17.20 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் நிரப்பப்பட்ட 12 பொட்டலங்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு 516.00 வெள்ளியாகும். சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்ட நிலையில் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதே நாளில் நண்பகல் 12.30 மணியளவில் தாமான் கிளேடாங் பெர்மாயில் உள்ள உணகவம் ஒன்றில் 23 முதல் 40 வயதுக்குட்பட்ட 3 இந்திய இளைஞர்களை தடுத்து விசாரித்ததில் தாமான் ராசி ஜெயா பகுதியில் சோதனை மேற்கொண்ட  சம்பந்தட்ட அதிகாரிகள் 325 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருளை உள்ளடக்கிய 200 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 9,750.00 வெள்ளியாகும். இம்மூவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது.

மேலும், நேற்று 31ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்துவாவில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 12,944.10 வெள்ளி மதிப்புடைய  431.47 கிராம் எடை கொண்ட ஹொரோய்ன் போதைப்பொருளை உள்ளடக்கிய 31 பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றியதோடு 31 வயது மதிக்கத்தக்க ஓர் இந்திய ஆடவரை கைது செய்தனர். இவ்வாடவர் இன்று  1ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதோடு, தைப்பிங்கிலுள்ள சிம்பாங், தாமான் பெங்கலான் மாஜுவில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது 13,800 வெள்ளி மதிப்புடைய  460 கிராம் எடை கொண்ட ஹொரோய்ன் பொட்டலத்தையும்  450 வெள்ளி மதிப்புடைய 3.0 கிராம் எடை கொண்ட ஷாபு போதைப்பொருள் அடங்கிய 5 பொட்டலங்களையும் கைப்பற்றியதோடு 3 வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள், 60,480 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த அனைத்து சோதனை நடவடிக்கையின் வாயிலாக 36,944,10 வெள்ளி மதிப்புடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை யாவும் 1952 அபாயகர போதைப்பொருள் தடுப்பு சட்டம் செக்‌ஷன் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.


ரோஸ்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நகைகள் சுங்கத் துறையிடம் அறிவிக்கப்படவில்லை


கோலாலம்பூர்- 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தங்க நகைகள் சுங்கத் துறையிடம் அறிவிக்கப்படவில்லை என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தில்  ரோஸ்மா மன்சோர் பெற்றுள்ளதாக கூறப்படும் 44 நகைகள் குறித்து எவ்வித பதிவுகளும் இல்லை என அவர் மக்களவையில் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதியாளர் சுங்க வரி செலுத்தப்படவில்லையென்றால் அது ஒரு குற்றமாக கருதப்படும்.

போலீஸ் அறிக்கைகள் எந்தவொரு குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்றால் 1967 சுங்கத் துறை சட்டவிதிகளின் படி அது ஒரு குற்றமாகும். மேலும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது வழிவகுக்கும் என அவர் சொன்னார்.

ஆயினும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்த தற்காப்பு அறிக்கையில் நகைகள் வாங்கியுள்ளதை ரோஸ்மா மறுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் டத்தோஶ்ரீ நஜிப்பின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 110 கோடி வெள்ளி மதிப்பிலான நகைகள்,  ஆடம்பர கைப்பைகள், கண்ணாடிகள், கடிகாரங்கள் ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

எல்.ஆர்.டி. வழிதடத்தில் விழுந்த ஆடவர் பலி


பெட்டாலிங் ஜெயா-

பூச்சோங் எல்.ஆர்.டி. நிலையத்தின் வழிதடங்களில்  விழுந்த ஆடவர் மரணமடைந்தார்.

இச்சம்பவம் இன்றுக் காலை 8.00 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தை உறுதிபடுத்திய செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் இஸ்மாடி போர்ஹான், இது தற்கொலையா?, விபத்தா? என போலீசார் விசாரித்து வருகிறது.

மரணமடைந்த ஆடவரின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தியபின் காலை 10.00 மணியளவில் எல்.ஆர்.டி. ரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.