Saturday 1 February 2020

சமுதாயத்திற்கு ஒரு தலைவனை தந்த ‘திரை மறைவு போராளி’ தோபுவான் உமா சம்பந்தன்


ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக சுதந்திர சாசனத்தில் கையெழுத்திட்ட ஒப்பற்ற தலைவர் துன் சம்பந்தன் ஆவார்.

ஒரு சமுதாயத்தின் தலைவராக உயர்வதற்கு சமுதாயம் உணர்வும் போராட்ட குணமும் மட்டுமே போதாது. அதற்கு உறுதுணையாக வாழ்க்கை துணைவியரின் முழுமையான ஆதரவும் கிடைக்கப்பெற வேண்டும்.
மஇகாவின் 5ஆவது தலைவராக  சமுதாயப் போராட்டத்தில் துன் சம்பந்தன் களம் கண்ட வேளையில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு சமுதாயத்திற்காக ஒரு தலைவனை உருவாக்கி தந்த தோபுவான் உமா சம்பந்தனின் அர்ப்பணிப்பும் தியாக குணமும் அளவிட முடியாது.

அவ்வகையில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தன் கணவரை அரசியலில் களம் காண விட்டு குடும்பத்திற்காகவும் கணவரின் லட்சியப் பயணத்திற்காகவும் திரை மறைவில் ஒரு போராளியாக வாழ்ந்து மறைந்துள்ள தோபுவான் உமா சம்பந்தனின் வரலாறு மலேசிய இந்தியர்களின் சரித்திரத்திலிருந்து அகற்ற முடியாது.

திடீர் மறைவை எய்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட கணபதிராவ், அன்னாரை பிரிந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

முதுமையின் காரணமாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தோபுவான் உமா சம்பந்தன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment