Sunday 29 March 2020

1 லட்சம் முகக் கவசங்களை ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவனம் இலவசமாக வழங்கியது

அலோர் ஸ்டார்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நோய் தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவனத்தார் 1 லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர்.
நாட்டில் நட்டமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறையினர், காவல்படையினர், நகராண்மைக் கழக பணியாளர்கள், பொதுத் துறை சேவையாளர்கள், ஊடகத்துறையினர்  ஆகியோருக்கு இந்த முகக் கவசங்கள் மனிதநேய அடிப்படையில் வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ செல்வகுமர் சண்முகம் தெரிவித்தார்.

அதோடு தமது நிறுவனத்தில் பணியாற்றும் 600 தொழிலாளர்களும் முகக் கவசங்கள் வழங்கியதாக கூறியுள்ள அவர், மேலும் 9 லட்சம் முகக் கவசங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

உயிர்கொல்லி நோயாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசங்கள் அவசியமானது எனும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையில் ஈடுபட்டுள்ள பொதுச் சேவை ஊழியர்கள், மருத்துவர்கள், காவல் படையினர் உட்பட பலரின் நலனும் காக்கப்படுவது அவசியமாகிறது.

அதன் அடிப்படையிலேயே தமது நிறுவனம் முகக் கவசங்களை வழங்க முன்வந்துள்ளதாக கூறியுள்ள டத்தோ செல்வகுமார், அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment