Saturday 12 December 2020

டத்தோ சராணி தலைமையிலான மாநில அரசில் இந்தியர் நலன் விடுபட்டு விடாது- டத்தோ இளங்கோ

ரா.தங்கமணி

ஈப்போ- 

பேரா மாநில 14ஆவது மந்திரி பெசாராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்ட டத்தோ சரானி முகமதுக்கு பேரா மாநில மஇகா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

மாநில மந்திரி பெசாராக பதவி வகித்து வந்த டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு அப்பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் அரசியல் நெருக்கடி பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

பேரா மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணி, அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய சிறந்த ஆட்சியை வழங்குவார் என்பதில் பேரா மஇகா நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.

2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ தலைமைத்துவத்தில் அமைந்துள்ள பேரா மாநில அரசில், இந்தியர்களின் நலன் விடுபட்டு விடாத சூழலில் மஇகா அணுக்கமான உறவை புதிய மந்திரி பெசாருடன் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

பேரா மந்திரி பெசாராக பதவி வகித்த பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஃபைசால் அஸுமு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி கண்டதை அடுத்து அப்பதவியிலிருந்து விலகினார்.

அணமையில் பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணிக்கு டத்தோ இளங்கோ மாலை அணிவித்து சிறப்பு செய்தார். பேரா மஇகாவைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தொகுதித் தலைவர்களும் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment