Thursday 26 November 2020

இந்திய தொழில்முனைவர்களுக்கு வெ.200 மில்லியன் கடனுதவி- மைக்கி பரிந்துரை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகங்களை மேம்படுத்தி கொள்ள வெ. 200 மில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என  நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) தெரிவித்தது.

கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அதிலும் இந்திய தொழில் நிறுவனங்கள் பெரும்  பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு  அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தக கடனுதவிகளை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவி புரியும் நோக்கில் வெ.200 மில்லியன் கடனுதவி திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ரூலிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டத்தை எஸ்எம்இ உட்பட நாட்டில் செயல்படும் வங்கிகளின் மூலம் துரிதப்படுத்தலாம் என்ற அவர், இதனை கண்காணிக்கும் நடவடிக்கையாக செயலகம் ஒன்றை அமைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட வெ.100 மில்லியவை தவிர்த்து கூடுதலாக வெ.200 மில்லியன் கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதே போன்று தெக்குன் கடனுதவித் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட வெ. 20 மில்லியனை வெ.50 மில்லியனாக உயர்த்துவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நிதியமைச்சருடனான சந்திப்பில் மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஏ.டி.குமாரராஜா, மைக்கியின் செயலவை உறுப்பினர்கள், முஸ்லீம் , சீன வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment