Thursday 7 November 2019

மதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேசியராய் ஒன்றிணைந்திருப்போம்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசியர்களாகிய நம்மிடம் சகிப்புத்தன்மையும் பல இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும்  அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களாகிய நம்மிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் சிலரின் சுயநலப் போக்கினாலே மத, பிரிவினைவாதப் போக்கு தலைதூக்குகின்றது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
அனைத்து மக்களிடமும் ஒரு பரஸ்பர நல்லுறவு கடைபிடிக்கப்படுகிறது. அதனாலேயே அனைத்து மக்களின் பெருநாள் காலங்களிலும் அனைத்து இன மக்களும் பங்கெடுக்கின்றனர்.

சீனப் பெருநாள், ஹரிராயா, தீபாவளி என எந்தவோர் இனத்தின் பெருநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் அனைவரும் பங்கெடுக்கிறோம். மலேசியர் என்ற உணர்வாலேயே நாம் அனைத்து இன மக்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் கூடி மகிழ்கிறோம்.

ஆனால், அவ்வப்போது நாட்டில் எழும் மதம் சார்ந்த பிரச்சினைகள் மலேசியர்களியடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர் குலைத்து விடக்கூடாது. இந்த மதம் சார்ந்த பிரச்சினைகள் சில தரப்பினராலேயே தூண்டி விடப்படுகிறது. அவர்களின் சுயநலப் போக்கு இந்த பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சில தரப்பினரின் சுயநலப் போக்குக்கு பலியாகாமல் மலேசியராய் நமக்குள் நிலவும் நல்லிணக்கத்தை நாம் ஒருபோதும் தொலைத்து விடகூடாது என்று அண்மையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் பணமுடிப்புகளை வழங்கினார்.

Advertisement

No comments:

Post a Comment