Wednesday 3 March 2021

சமூகச் சேவைகளில் மக்களை கவரும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

 எஸ்.லிங்கா

சுங்கை சிப்புட்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான கருமேகம் எப்போது வேண்டுமானாலும் சூழலாம் என்ற நிலையில் சுங்கை மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மீதான விமர்சன பார்வையை ஒருபோதும் புறந்தள்ள முடியாது.

மஇகாவின் தேசியத் தலைவர்களாக திகழ்ந்த துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் போட்டியிட்ட இத்தொகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி வசமாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் அப்போதைய மஇகாவின் தேசியத் தலைவராக இருந்த துன் சாமிவேலும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமாரிடம் வீழந்தார்.

தொடர்ந்து 2013, 2018ஆம்  ஆண்டு பொதுத் தேர்தல்களிலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியிடம் இழந்து வரும் மஇகா, இம்முறை அத்தொகுதியை தன்வசப்படுத்த களம் கண்டுள்ளது.

இத்தொகுதியை மீட்டெடுப்பதற்காக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனே நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில் தீவிர செயல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை காட்டிலும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் சுங்கை சிப்புட் மக்களை கவர்ந்த வண்ணம் உள்ளன.

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை காட்டிலும் மக்களை அணுகும் முறையிலும் சமூகச் சேவைகளிலும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் மக்களிடையே பிரபலமடைவதால் அங்கு தேமுவிற்கான வெற்றி உறுதி செய்யப்படுவதாகவே கருதப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் 15ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் மனங்களை வெல்பவரே தேர்தல் களத்திலும் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வெற்றி பெறுவாரா? அல்லது பிகேஆர் சின்னத்தை காட்டினாலே போதும் மக்கள்  வாக்களித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் கோதாவில் களமிறங்கி கேசவன் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment