Sunday 8 November 2020

தீபாவளி நாளில் ஆலயங்களை இருநாட்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்- பொது இயக்கங்கள் கோரிக்கை

ரா.தங்கமணி

இவ்வாண்டு தீபாவளி பெருநாளை முன்னிட்டு ஆலயங்களை திறப்பதற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி அளித்துள்ள அரசாங்கம் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு சார்பற்ற பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோப்புப் படம்

உலகை அச்சுறுத்தும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு புதிய வழிகாட்டி நடைமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் தீபாவளி முதல் நாள் மட்டும் காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.

ஆனால் தீபாவளி பெருநாள் அமாவாசை நாளில் வருவதால் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பலர் நினைத்திருக்கலாம். பெரும்பாலான இந்துக்கள் தங்களது  முன்னோருக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பதை தங்களது  முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனர்.

முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பங்கெடுப்பதுபோல் இந்தியர்கள் இந்த நாளில் தான் ஆலயங்களுக்கு வருவார்கள் என்ற கட்டுப்பாடு கிடையாது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஆலயங்களுக்கு செல்வர். அதிலும் அமாவாசை நாள் இரு நாட்களுக்கு வருவதால்  இந்துக்கள் ஆலயங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் அ.குணேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

குணேந்திரன்                            தேவன் 

அதோடு தீபாவளி பெருநாளுக்கு ஒருநாள்  மட்டுமே ஆலயங்கள் திறப்பதை காட்டிலும் இரு நாட்களுக்கு திறந்து விடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அமாவாசை நாளில் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு  இந்துக்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி இந்திய சமூகத் தலைவர் தேவன் வெள்ளையன் கேட்டுக் கொண்டார்.

சுப்பிரமணியம்      ஶ்ரீ திவ்யா

கோவிட்-19 பாதிப்பு காலகட்டத்திலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில் அமாவாசை இருநாட்களுக்கு வருவதால் ஆலயங்களை 14,15ஆம் தேதிகளில் திறப்பதற்கு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை இந்துக்கள் ஒரு புனித காரியமாக கருதுகின்றனர். அத்தகையை நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு  வாய்ப்பளிக்கும் வகையில் ஆலயங்களை இரு நாட்களுக்கு திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் ராஜு,  மலேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் சமயப் பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீதிவ்யா ஆகியோர் வலியுறுத்தினர்.

               சிவராஜன்          டத்தோஶ்ரீ சரவணன்

மேலும், தீபாவளி நன்னாளில் இந்துக்கள் ஆலயம் செல்வதை கடமையாகக் கொண்டுள்ளனர். அத்தகைய நாளில் அவர்களின் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய புனித காரியத்தை நிறைவேற்றும் வகையில் இரு நாட்களுக்கு ஆலயம் திறப்பதற்கு  தமது முந்தைய முடிவை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மில்லினியம் சமூக இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் உறுப்பினர் கே.சிவராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment