Friday 21 August 2020

மகாதீரின் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

தஞ்சோங் மாலிம்-

''பெஜுவாங்'எனும் கட்சியை தொடங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடங்கியிருக்கும் போராட்டம் யாருக்கானது? என்பதை இந்தியர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

அம்னோவில் இருந்து 4ஆவது பிரதமராக பதவி வகித்தபோதும்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிரதமராக பதவி வகித்த போதும் இந்திய சமுதாயத்திற்கு துன் மகாதீர் ஆற்றிய பங்கு என்ன? என்பதை இந்திய சமுதாயமே அறியும்.

துன் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயம் இழந்தது பல. அதன் தாக்கத்தினாலேயே இன்றளவும் பின்தங்கிய சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துன் மகாதீர் தற்போது பெஜுவாங் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி யாருக்கான போராட்டத்தை உள்ளடக்கியது என்பதை சொல்ல வேண்டியதில்லை. தனது மகனின் அரசியல் நகர்வை மட்டுமே வைத்து தற்போதும் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தேசிய முன்னணி அப்படியல்ல. இந்தியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக பதவி வகித்தபோது தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்தியர்களின் சமூகப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திட்டவர் டத்தோஶ்ரீ நஜிப் ஆவார்.

ஆதலால் விரைவில் நடைபெறவுள்ள சிலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள முகமட் ஸைடி அஸிஸ் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வற்றாத ஆதரவு வழங்க வேண்டும்.  

துன் மகாதீர் கட்சியை பிரதிநிதித்து களமிறங்கியுள்ள வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு ஒரு தவறான அத்தியாயத்திற்கு வித்திடும் என்று நேற்று நடைபெற்ற சிலிம்  சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பிரச்சார நிகழ்வின்போது டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ நஜிப், ம.ம.ச.கட்சியின்  உதவித் தலைவர் டத்தோ சரவணன், ம.ம.ச.கட்சியின் தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் ராவ்,  மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment