Wednesday 28 October 2020

10 ஆண்டுகளை கடந்த வரலாற்று சிறப்புமிக்க பிரீக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா

கோலாலம்பூர்-

கோலாலம்பூரில் உள்ள பழைய இந்திய குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கி வந்த பிரிக்பீல்ட்ஸின், நகர்புற அந்தஸ்தை அங்கீகரிக்கும் விதமாக 2009-இல் லிட்டில் இந்தியா மஸ்ஜிட் இந்தியாவிலிருந்து பிரிக்பீல்ட்ஸ்-க்கு மாற்றம் கண்டது.

அன்றைய கூட்டரசு பிரதேச மற்றும் நகர்புற நல்வாழ்வு துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் எண்ணத்தில் உதித்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின் பிரமாண்ட தோற்றம் அக்டோபர் 27, 2010- இல் ஒரு புதிய லிட்டில் இந்தியாவாக திறப்பு விழா கண்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு, அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் மிக கோலாகலமாக அரங்கேற்றம் கண்டது.

புதிய நுழைவாயில், கலை நயத்தோடு வளைவுகள்,  பரந்த தெருக்கள், யானை நீரூற்று, அலங்கார தூண்கள், வர்ண அலங்கார விளக்குகள் என பார்த்ததும் ஒரு கம்பீரம், மிடுக்கு, கலை நயம் நிறைந்த லிட்டில் இந்தியாவின் திறப்பு விழாவைக் காண 5000-யிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும், சுற்று வட்டார மக்களும், முக்கியப் பிரமுகர்களும் அலையென திரண்டனர்.

நகரத்தின் நடுவில் இந்திய பாரம்பரியம், கலை கலாச்சாரம் நிறைந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. என்றென்றும் நிலைத்திருக்கும் அந்த பெருமையை நமக்கு வழங்கிய டத்தோஸ்ரீ எம்.சரவணனின் இந்த திட்டம் பாராட்டுக்குரியது.



சுற்றுலாத் தளமாகவும், இந்தியர்களின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் ஒரே இடமாகவும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா அமைந்திருப்பதில் மகிழ்ச்சியே. அதுவும் விழாக்காலங்களில் மக்கள் கூட்டமும், தோரணங்களும், விளக்குகளும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

No comments:

Post a Comment