Wednesday 5 July 2017

திருமண சீர்திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்க பிஎஸ்எம் சரஸ்வதி கோரிக்கை



கோலாலம்பூர்-
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என மலேசிய சோசலீஸ்ட் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இம்மாதம்  24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10 தேதி வரை 12 நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாக அதன் இணைய பக்கத்தில் அறிவித்திருக்கும் வேளையில்அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்தார்.

சிவில் திருமண சட்டமுறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தன்னிச்சையாக இஸ்லாம் மதத்தினை தழுவும் நிலை ஏற்படும்போது , சிவில் திருமணத்தின் வழி பிறந்த குழந்தைகளின் எதிர்காலம், அவர்களை பராமரிக்கும் உரிமைகள் போன்றவை பல ஆண்டுகளாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு தீர்வு காண்பதே இச்சட்ட மாற்றத்திற்கான முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நாடாளுமன்ற அட்டவணையில் உள்ளடங்கிய இந்த சட்ட மசோதா திடீரென மறு ஆய்வு செய்வதற்காக அரசு ஒத்திவைத்திட முடிவெடுத்திருப்பதாக துணைப்பிரதமர் அறிவித்தது அன்று அனைவரையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இந்த சட்ட மசோதாவின் நோக்கத்தினை அதன் விளக்க உரையில் இதுநாள் வரை எழுந்துள்ள பாதிப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லகடந்த ஏப்ரல் 2009ல் இவ்விவகாரத்திற்கு ஏற்கெனவே அமைச்சரவை முடிவெடுத்திருக்கும் வேளையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்த சர்ச்சைக்கு சட்டத்திருத்தத்தின் வழி தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார் .

ஆகவே, சிவில் திருமணத்தின் வழி பிறந்த குழைந்தைகளின் பெற்றோரில் யாராவது ஒருவர் இஸ்லாம் மதத்தினை தழுவாரேயானால், அக்குழந்தைகள் 18 வயது அடையும் வரை அவர்கள் தாம் பிறந்த மதத்திலேயே இருந்திடவும் அதன் பின்னர் அவர்கள் எந்த மதத்தினை பின்பற்ற வேண்டும் என அவர்களே சுயமாக முடிவெடுக்கலாம் என்பதே இந்த மசோதாவின் முக்கிய சாரம்சமாகும்.

இந்த திருமண சட்டத்திருத்த மசோதாவினை மலேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் வரவேற்றிருப்பதோடு இந்த மாற்றம் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்திட வழி செய்யும் எனவும் கூறியுள்ளார்.

அதோடு, நமது நாட்டின் முக்கிய அரசியல் சட்ட பேராசிரியர்களில் ஒருவரான டத்தோ சாட் சலீம் பாரூக்கி அவர்களும் கூட இந்த திருமண சட்ட மசோதா மாற்றத்தில் இஸ்லாம் அல்லாதவர்களின் சிவில் திருமணத்தின் உரிமைகளை மட்டுமே உள்ளடக்கியதாகவும், இவை அரசியல் சட்டத்திற்கும் இஸ்லாமிய கோட்பாட்டிற்கும் எவ்வகையிலும் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் தெளிவாக  விளக்கியுள்ளதையும் சரஸ்வதி சுட்டிகாட்டினார்.

ஆகவே, இந்த ஜுலை மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா வாக்குறுதி அளித்துள்ளப்படி தாக்கல் செய்யப்பட வேண்டும். அரசின் இந்த காலதாமத்தினால், தாய்மார்களின் உரிமைகுழந்தைகளின் எதிர்காலம் மட்டும் பாதிக்கப்படவில்லை. மாறாக, இஸ்லாம் அல்லாதவர்களின் அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அவர்களின் தார்மீக உரிமையும், நாட்டின் மதசார்பற்ற அரசியல் கொள்கையும்மக்களின் ஒற்றுமையும் இதில் அடங்கியுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திருமண சீர்த்திருத்த சட்ட மசோதாவினை சட்டமாக்கப்பட வேண்டும் என சரஸ்வதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment