Saturday 27 February 2021

மஇகாவுக்கு யாரும் 'பாடம்' புகட்ட வேண்டாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

 எஸ்.லிங்கேஸ்

சுங்கை சிப்புட்-

ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றுபவர்கள் யார்? என்ற பாடத்தை மக்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் தோல்வி கண்டதால் ' மஇகாவுக்கு பாடம் புகட்டி விட்டோம்' என சில தரப்பினர் மார்தட்டி கூறுகின்றனர்.

பொதுத் தேர்தல்களில் மஇகா தோல்வி கண்டாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் மஇகா ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

இவ்வளவு ஏன், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியே ஆட்சி அதிகாரத்தை இழந்தது. மஇகாவும் 22 மாதங்கள் எதிர்க்கட்சியாகித்தான் திகழ்ந்தது.

ஆனால் இந்த 22 மாதங்களில் மஇகா தனது சேவையை ஒருபோதும் நிறுத்திக் கொண்டது இல்லை.  தன்னை நாடி வந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வந்தோம்.

மஇகாவை குறை சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்திய சமுதாயத்திற்கு இந்த 22 மாதங்களில் எத்தகைய சேவையை வழங்கினர் என்பதை இந்திய சமுதாயமே உணரும்.

தோல்வியில் மஇகா பாடம் கற்றுக் கொள்வதை விட யார் உண்மையான சேவையாளர்கள்? என்பதை மக்கள்தான் படிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சேவையாளர்களை அங்கீகரிக்க முடியும், இந்திய சமுதாயம் பயனடையும் என்று சுங்கை சிப்புட் மஇகா தலைவர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இராமகவுண்டர், பேரா மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ தொகுதி மஇகா பொறுப்பாளர்களும் மஇகா கிளை பொறுப்பாளர்களோம் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment