Wednesday 13 February 2019

இந்திரா காந்தி வழக்கில் எனது கடமை முடிந்தது- குலசேகரன்

ஜோர்ஜ்டவுன்-
முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை திருமதிஎம்.இந்திரா காந்தி விவகாரத்தில் தமது கடமை முடிந்து விட்டது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தமது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதோடு 9 மாத கைக்குழந்தையாக இருந்த சிறுமி பிரசன்னா டிக்சாவை உடன் அழைத்துக் கொண்டு சென்றதற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தியவர் திருமதி இந்திரா காந்தி.

திருமதி இந்திரா காந்தியின் வழக்கறிஞராக பொறுப்பேற்று வழக்கு நடத்திய குலசேகரன், அவரின் வழக்கறிஞராக பணியாற்றியது நிறைவுக்கு வந்துள்ளதாகவும் தற்போது தாம் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிப்பதால் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது என்று அவர் சொன்னார்.

யாருமே ஏற்காத இவ்வழக்கை தாம் 10 ஆண்டுகளாக ஏற்று நடத்தியதாக
குறிப்பிட்ட அவர், இது சமயம் சார்ந்த ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம் ஆகும். முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட்டரசு நீதிமன்றத்திலும் பல நாட்களை செலவழித்துள்ள நிலையில் எனது வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் பல ஆயிரம் வெள்ளியையும் செலவழித்துள்ளேன்.

மனிதவள அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு வியாபார நோக்கத்துடன் நான் செயல்பட முடியாது. எனது பொது கடமையை நான் முழுமையாக நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த 2009இல் இஸ்லாத்திற்கு மதம் மாறிய இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா எனும் கே.பத்மநாபன் ஒருதலைபட்சமாக மூன்று பிள்ளைகளை மதமாற்றம் செய்ததோடு பிரசன்னா டிக்சாவுடன் தலைமறைவானார்.

பிரசன்னா டிக்‌ஷாவை மீட்பதற்காக திருமதி இந்திரா காந்தி சட்டப் போராட்டம் நடத்திய வேளையில் அவரின் வழக்கறிஞராக குலசேகரன் பிரதிநிதித்திருந்தார்.

No comments:

Post a Comment