Tuesday, 26 February 2019

செமினி தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம்- கணபதிராவ்

ரா.தங்கமணி

புத்ராஜெயா-
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்

450 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் இடவசதி நலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பள்ளி வாரியக்குழு கோரிக்கை முன்வைத்திருந்தது.

 இப்பிரச்சி னையை காரணம் காட்டி சிலர் அதனை அரசியல் சர்ச்சையாகவும் உண்டாக்கினர்.

இந்நிலையில் இன்று இப்பள்ளியின் நில விவகாரம் தொடர்பில் புத்ராஜெயாவில் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சி தலைமையில் நில மேம்பாட்டாளரான சைம் டார்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. அதோடு, முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 34 தோட்டப் பாட்டாளிகளுக்கு மலிவு விலை வீடுகளும் 0.7 ஏக்கர் நிலம் ஆலயத்திற்கும் 20,000 சதுர அடி நிலம் தேவாயத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளி நில விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதால் இதனை இன்னும் அரசியல் சர்ச்சையாக உருவாக்க வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

இதனிடையே, இப்பள்ளிக்கு கூடுதல் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 34 தோட்ட பாட்டாளிகளுக்கான வீடமைப்பு திட்ட வரைபடத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று சைம் டார்பி நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.
 

வாக்குறுதிகளை நிறைவேற்ற 9 மாதங்கள் போதுமா? – கணபதிராவ்

ரா.தங்கமணி

சிப்பாங்-
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது மக்களின் மனமாற்றத்தால் ஆட்சி அமைத்த நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 10 மாதங்கள் போதுமா? என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணியிடமிருந்து கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி (மக்கள் கூட்டணி) கடந்த 10 ஆண்டுகளாக இங்கு சிறப்பான சேவையை வழங்கியதன் காரணமாகவே நடந்து முடிந்த தேர்தலில் சிலாங்கூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

தற்போது மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 9 மாத கால அவகாசம் போதாது. கடந்த தேமு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதோடு நாடும் மிகப் பெரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது.

நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்கு  நம்பிக்கை கூட்டணி தீவிரமாக களம் கண்டு வரும் வேளையில் தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றபடும். ஆனால் அதற்கு சில கால அவகாசம் தேவைபடுடலாம்.

இன பாகுபாடற்ற  ஆட்சி முறையை வழங்கி வரும் நம்பிக்கைக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு தொடரப்பட வேண்டும் எனவும் செமினி இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளருக்கே மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்ப்பதாகவும் சிப்பாங்  பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள கலாச்சார சதுக்கத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தோரணம் பின்னுதக், கோலம் இடுதல், உறியடி போன்ற பல்வேறு போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன.

Wednesday, 20 February 2019

புல்வாமா தாக்குதல்; தீவிரவாதம் வேரறுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

ஷா ஆலம்-

காஷ்மீர், புல்வாமா பகுதியில் இந்திய துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு மனிதாபிமானமற்ற செயலாகும் அமைந்துள்ள்ளது என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.

தங்களது குடும்பத்தினருடன் விடுமுறையை இனிமையாக கழித்து நாட்டை காப்பதற்காக பணிக்கு திரும்பிய ராணுவப் படையினரை தீவிரவாத தாக்குதல் மூலம் படுகொலை செய்திருப்பது இரக்கமற்ற செயலாகும்.

விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய வீரர்கள் உயிரற்ற சடலமாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடுவது அனைவரின் மனதையும் சுக்குநூறாக நொறுக்கியுள்ளது.
மணிமாறன்

இந்த தீவிரவாத தாக்குதல் புரிந்த கொடியவர்கள் மீது ஈவிரக்கம் காட்டாமல் தீவிரவாதத்தை முற்றாக துடைத்தொழிப்பதில் இந்தியாவுடன் உலக நாடுகள் கைகோர்த்து அதிரடியாக களம் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு வீர மரணத்தை தழுவியுள்ள வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

கடந்த 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் சென்ற சிபிஆர்எஃப்  வீரர்களின் பேருந்து மீது 350 கிலோ வெடிமருந்தை நிரப்பிய காரை கொண்டு மோதியதில் 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிரகாசமாக ஜொலிக்கவிருக்கிறது 'சூப்பர் மூன்' நிலவு

கோலாலம்பூர்-
பூமிக்கு மிக அருகில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் 'சூப்பர் மூன்' நிலவை மலேசியர்கள் இன்றிரவு 11.53 மணியளவில் கண்டு களிக்கலாம் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது.

பூமிக்கு மிக அருகில் வருவதால் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் சூப்பர் மூன் நிலவை தெளிவாக பார்க்கலாம்.

இவ்வருடத்தில் மூன்று முறை நிகழக்கூடிய இச்சம்பவம் கடந்த ஜனவரியிலும் இன்றிரவும் மார்ச் 21ஆம் தேதியும் கண்டு களிக்கலாம் என்று அம்மையம் தெரிவித்துள்ளது.

பி40 இளையோருக்கு வெ.100- நிதியமைச்சர்

கோலாலம்பூர்-
குறைந்த வருமானம் பெறும் தனிநபர்களின் சுமையை குறைத்திடும் வகையில்  இளையோருக்கு வாழ்க்கை செலவீன தொகை (பிஎஸ்எச்)  100 வெள்ளி மார்ச் மாதம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இளையோர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவீனங்களை எதிர்கொள்ள பிஎஸ்எச் திட்டம் இளைஞர்களுக்கும் தொடர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்ற நிதியமைச்சர், அரசாங்கம் இளைஞர்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்திருப்பதாகவும் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பிஎஸ்எச் திட்டத்தை  அம்கீகரித்துள்ளது.

பிஎஸ்எச் திட்டத்தில் பதிந்து கொண்டுள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 3 மில்லியன் இளையோரின் வங்கி கணக்கில் மார்ச் மாத இறுதியில் நேரடியாக இந்த நிதி சேர்க்கப்படும் எனவும் இத்திட்டத்திற்காக 300 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

பெண்மணியிடம் கொள்ளை; குண்டர் கும்பலைச் சேர்ந்த கொள்ளையன் கைது

கோலாலம்பூர்-
தாமான் முத்தியாரா எம்ஆர்டி மின்தூக்கியில் பெண்மணியை தாக்கி கொள்ளையிட்ட ஆடவனை கைது செய்துள்ள போலீசார், அவ்வாடவன் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் எம்ஆர்டி நிலையத்திலுள்ள நிலையத்திலுள்ள மின்தூக்கியில் பெண்மணியை தாக்கி கொள்ளையிடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதில் கொள்ளையிட்ட ஆடவனை வலை வீசி தேடிய போலீசார் தாமான் செராசிலுள்ள வீடொன்றில் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட ஆடவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் எனவும் அவ்வாடவன் மீது கொள்ளை, வீடு புகுந்து கொள்ளையிடுதல் என 8 புகார்கள் இருப்பதாக மாநகர போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார்.

Monday, 18 February 2019

வெளுத்தது சாயம்; 'பச்சோந்தி' ஆனார் சிவசுப்பிரமணியம்- செல்வகணேசன் சாடல்

ரா.தங்கமணி

ஈப்போ-
பல ஆண்டுகளாக புறம்போக்குவாசிகளாக வாழ்ந்து வந்த புந்தோங் இந்தியர்களுக்கு பெம்பானில் வழங்கப்பட்ட வீட்டுடைமை நிலத்தை வழங்க மறுக்கும் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் செயல் நடவடிக்கை ஒரு துரோகச் செயலாக அமைந்துள்ளது என்று புந்தோங் சமூகநல இயக்கத் தலைவர் செல்வகணேசன் சாடினார்.

பெம்பான் வீட்டுடைமை திட்டத்தில் முதல் கட்டமாக 133 நிலம் வழங்க முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் அனைத்து அடிப்படை வேலைகளையும் முடித்து விட்ட நிலையில் இன்னமும் பிரிமியம், அதற்கான வரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தினாலே போதுமானது.

வெ.2,000க்குள் அடங்கக்கூடிய வேலையை இன்னும் தாமதப்படுத்தி தற்போது பெம்பான் பகுதியில் இந்த 133 பேருக்கும் நிலம் வழங்க முடியாது, புந்தோங்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் வீட்டை தருகிறோம் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கூறுவது அவர்களுக்கு வாக்களித்த புந்தோங் வாழ் இந்தியர்களுக்கு செய்யும் துரோகச் செயலாகும்.

பெம்பான் நில வீட்டுடைமை திட்டத்தில் மொத்தம் 846 லோட் கொடுக்கப்பட வேண்டியது ஆகும். இதில் புந்தோங்கைச் சேர்ந்த 587 பேருக்கு வழங்க வேண்டியது ஆகும்.

587 பேரில் வீடு கட்ட தகுதி வாய்ந்த 133 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 133 பேரில் பலர் வெளிமாநிலங்களில் உள்ளனர் என குற்றஞ்சாட்டும் 'மாண்புமிகுகள்' 133 பேரையும் அழைத்து நேர்காணல் செய்து அவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக நில திட்டத்தையே ரத்து செய்வது முட்டாள்தனமாகும்.

இதே சிவசுப்பிரமணியம் முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது புந்தோங்கில் வாழும் புறம்போக்குவாசிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என குரலெழுப்பி விட்டு இன்று ஆட்சி அதிகாரம் அவர்கள் வசமானபோது நில திட்டத்தை ரத்து செய்வது இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

புந்தோங் மக்களுக்கு நல்லது செய்வார் என சிவசுப்பிரமணியத்தை நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்று மிகப் பெரிய ஆப்பு வைத்துள்ளதில் அவரின் சாயம் வெளுத்து விட்டது.  இவ்விவகாரத்தில் பச்சோந்தி போல சிவசுப்பிரமணியம் நடந்து கொள்ளக்கூடாது.

தேமு ஆட்சியில் பெம்பானில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்களுக்கு  நிலம் வழங்கப்பட  வேண்டும். அதை விடுத்து நிலத்தை மூன்றாம் தரப்பு கைமாற்றி விடக்கூடாது என்பதை சிவசுப்பிரமணியம் உணர வேண்டும் என்று செல்வகணேசன் வலியுறுத்தினார்.

இனவாதத்திற்கு முடிவு கட்டி மிதவாதத்திற்கு துணை நிற்போம்- கணபதிராவ் வலியுறுத்து

காஜாங்-
அம்னோ- பாஸ் கட்சி நடத்தும், இனவாத அரசியலுக்கு முடிவு கட்டி நாட்டு மக்களிடையே மிதவாத கொள்கை வலுபெறுவதற்கு  செமினி  வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்விரு கட்சிகளும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன.  ஆனால் மலேசியர்கள் இனவாதத்திற்கு அப்பாற்பட்டு மலேசியர்களாக இருக்க மட்டுமே விரும்புகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் மக்கள் கூட்டணி அனைத்து இன மக்களின் நலனையும் பாதுகாத்து வருகிறது. இனவாதத்திற்கு அப்பாற்பட்டு மலேசியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

இனவாதத்திற்கு முடிவு கட்டும் வகையில் செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு செமினி வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்கிட வேண்டும்.

சிறந்த ஆட்சியின் வழி மலேசியராய் நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கும் இனவாதத்தை விரட்டியப்பதற்கும் இந்த இடைத் தேர்தலை ஒரு களமாகக் கொள்வோம் என்று நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

Sunday, 17 February 2019

4 முனைப் போட்டியில் செமினி இடைத் தேர்தல்

காஜாங் -
செமினி சட்டமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவியுள்ளது.
இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் வேட்பாளராக களமிறங்க 4 பேர் வேட்புமனுவை சமர்பித்தனர்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அய்மான் ஸைனாலி, தேமு வேட்பாளராக ஸக்காரியா ஹனாஃபி, பிஎஸ்எம் கட்சி சார்பில் நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் ஆகியோருடன் சுயேட்சை வேட்பாளராக குவான் சே ஹெங் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

செமினி  சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள்

கோலாலம்பூர்-
இன்று நடைபெற்ற செமினி சட்டமன்றத் தொகுதி வேட்புமனுவின் போது இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கரகோஷத்தை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தின்போது சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்டு வன்மையான சொற்களை தேமு ஆதரவாளர்கள்  பிரயோகித்தனர்.

என்னை தாக்கும் வகையில் நடந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள் என்னை
அவமானத்தியதோடு பிடித்து தள்ளினர்.

அச்சமயம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் வந்து உதவினர். இதற்கு பாஸ் கட்சியினரே சாட்சியாவர் என்று சைட் சித்திக் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

செமினி: அம்னோவுக்கு ஆதரவாக பாஸ் களம் காணாது- பிரதமர்

-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாக பாஸ் கட்சி களம் காணாது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

நேற்று  வெள்ளிக்கிழமை தன்னை சந்தித்த பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹடி அவாங்கிடம் பல அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினேன். அப்போது செமினி இடைத் தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாக களமிறங்கப் போவதில்லை என்று ஹடி அவாங் கூறினார்.

'பாஸ் கட்சி அம்னோவை ஆதரிக்கவில்லை. ஒரு புரிந்துணர்வு அடிப்படையிலேயே அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றியதாக ஹடி கூறினார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Friday, 15 February 2019

செமினி இடைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தன 3 கட்சிகள்

கோலாலம்பூர்-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்களை மூன்று கட்சிகள் அறிவித்துள்ளன.

வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக உள்ளூரைச் சேர்ந்த அய்மான் ஸைனாலி களமிறக்கப்படவுள்ளார். பிபிபிஎம் கட்சியை  பிரதிநிதித்து அவர் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

அதேபோன்று தேசிய முன்னணி வேட்பாளராக அம்னோவின் அடிமட்ட உறுப்பினர் ஸக்காரியா ஹனாஃபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பக்காத்தான்  ஹராப்பான், தேசிய முன்னணியை தவிர்த்து பிஎஸ்எம் கட்சி சார்பில் அதன் இளைஞர் பிரிவைச் சேர்ந்த நிக் அஸிஸ் அஃபிக் களமிறக்கப்படவுள்ளார்.

133 இந்தியர்களுக்கு துரோகம் இழைக்கிறதா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

ஈப்போ-
புந்தோங்கில் வீடற்றவர்களாக வாழும் 133 இந்தியக் குடும்பங்ளுக்கு பத்துகாஜா, பெம்பானில் வழங்கப்பட்ட வீட்டுமனை நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படாது என்று பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் கூறியுள்ளது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக கருதப்படுகிறது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்த 133 இந்தியக் குடும்பங்களுக்கும் நில ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்நிலத்தை சீர்படுத்துவதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்தார்.

நிலம் சீரமைக்கப்பட்ட 133 இந்தியக் குடும்பங்களுக்கும் நிலம் வழங்குவதற்காக ஒப்புதல் கடிதம் கடந்த தேமு ஆட்சியின்போதே வழங்கப்ப்பட்ட நிலையில் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது மாநில ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது இந்நிலத்தை இந்தியர்களுக்கு வழங்க முடியாது என கூறுவது அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே கருதப்படுகிறது.

இந்தியர்கள் வழங்கிய முழுமையாக ஆதரவினாலேயே இன்று மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கொண்டிருக்கின்ற நிலையில் இப்போது இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சிப்பது பக்காத்தான் ஹராப்பானுக்கே ஆபத்தாக முடியலாம்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினராகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியர்களே பதவி வகிக்கின்ற நிலையில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கு உடந்தையாக செயல்படுகின்றனரா? என்ற கேள்வி எழுகிறது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தியர்கள் சார்ந்த ஒரு பிரச்சினை
என்றால் பொங்கி கொண்டு அறிக்கை மேல் அறிக்கை விடும் இரு மக்கள் பிரதிநிதிகளும் தற்போது 133 இந்தியக் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கு எதிராக வாயை திறக்காமல் மெளனம் காப்பது ஆளும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.